இம்பால்: மணிப்பூர் சென்ற மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாலை மார்க்கமாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அம்மாநில போலீஸ் அனுமதி மறுத்தது. அதேநேரத்தில் ஹெலிகாப்டர் மூலமாக சென்று பாதிக்கப்ப்ட்ட மக்களை சந்திக்கலாம் என போலீஸ் தரப்பு தெரிவித்த யோசனையை ராகுல் தரப்பு நிராகரித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் 2 மாதங்களாக நீடிக்கும் வன்முறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கட்டுப்படுத்தவில்லை என்பது எதிர்க்க்கட்சிகளின் புகார். மணிப்பூர் மோதல்கள் நாளும் தொடருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் சென்று அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார். 50,000 பாதுகாப்பு படையினர் மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மணிப்பூரில் வன்முறை கட்டுப்படுத்தப்படவில்லை.
2 மாத காலம் நீடிக்கும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மணிப்பூர் மாநிலத்துக்கும் நேரிலும் செல்லவில்லை பிரதமர் மோடி என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில் மணிப்பூருக்கு 2 நாட்கள் பயணமாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை வந்தடைந்தார். இம்பால் விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க காரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொன்டார். ஆனால் குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் ராகுல் காந்தியை சாலை மார்க்கமாக செல்ல போலீஸ் அனுமதிக்கவில்லை. ராகுல் காந்தியின் பாதுகாப்பு காரணங்களுக்காக மணிப்பூர் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மேலும் ராகுல் பொதுமக்களை சந்திக்க, ஹெலிகாப்டர் மூலம் செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பாதுகாப்பு படையினரின் அறிவுறுத்தல்களை நிராகரித்து சாலை மார்க்கமாகத்தான் செல்வோம் என ராகுல் தரப்பு பிடிவாதம் காட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ராகுல் காந்தியை மணிப்பூர் போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.