லண்டனை சேர்ந்த ரோஹன் கோதானியா என்ற 16 வயது சிறுவன், கடந்த ஆகஸ்ட் 15, 2020 அன்று புரோட்டீன் ஷேக் குடித்ததால் நோய்வாய்ப்பட்டார். பின்னர் வெஸ்ட் மிடில்செக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ‘இர்ரிவர்சபுல் மூளை பாதிப்பு’ (irreversible brain damage) இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதையடுத்து அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் தந்தையிடம் நடத்திய விசாரணையில், தன் மகன் மிகவும் ஒல்லியாக இருந்ததால், அவரின் தசைகளை வளர்க்க உதவும் புரோட்டீன் ஷேக் வாங்கிக் கொடுத்துள்ளதாகக் சொல்லியுள்ளார்.
ஆனால் அந்த ஷேக், புரோட்டீன் ஸ்பைக் ஆர்னிதைன் டிரான்ஸ்கார்பமைலேஸ் (OTC) குறைபாடு எனப்படும் அரிய மரபணு நிலையைக் கொண்டுவந்துள்ளது. இது ரோஹனின் ரத்த ஓட்டத்தில் அமோனியாவின் முறிவைத் தூண்டி ஆபத்தான நிலைக்குத் தள்ளியுள்ளது.
சிறுவன் இறந்த பிறகு நடந்த பிரேதப் பரிசோதனை முடிவில் ரோஹன் இறந்ததற்கான காரணத்தை முதலில் கண்டறிய முடியவில்லை. ஏனெனில் அவர் இறந்த உடனேயே அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. பிறகு பக்கிங்ஹாம்ஹையரில் உள்ள மில்டன் கெய்ன்ஸ் கரோனர் கோட்டில் நடந்த விசாரணையில் ரோஹன் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு, கடைகளில் விற்கப்படும் புரோட்டீன் ஷேக்குகளில் உயிர் காக்கும் சுகாதார எச்சரிக்கை வாசகங்கள் சேர்க்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தின் மூத்த அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை பற்றி பேசியுள்ள கரோனர் கோர்ட் அதிகாரி, “இந்த புரோட்டீன் ஷேக் பானங்களின் பேக்கேஜிங்கில் ஏதேனும் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். OTC என்பது அரிதான நோய், யாராவது புரோட்டீன் ஷேக்கை குடித்தால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.
விசாரணையில் பேசிய ரோஹனின் தந்தை, “நான் தசைகளை வளர்ப்பதற்காகத்தான் இதை வாங்கினேன். என் மகன் மிகவும் ஒல்லியாக இருந்தார். அவரை சாப்பிடச்சொல்லி தொல்லை செய்வதைவிட, இதுபோன்ற ஷேக் மூலம் அவரின் தசைகளை வளர்த்தால் சற்று நன்றாக இருப்பார் என நாங்கள் நினைத்தோம். ஆனால் இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.
ரோஹனுக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது. ரோஹன் அற்புதமான ஓர் இளைஞனாக வளர்வதை நாங்கள் கற்பனை செய்தோம். அவர் தன் முழு வாழ்க்கை பற்றியும் பெரிய கனவுகளுடனும் நம்பிக்கையுடனும் இருந்தார். ரோஹன் போன்ற அன்பான மற்றும் மென்மையான ஆன்மாவின் இழப்பால் இந்த உலகம் இருண்ட இடமாக உள்ளது” என துக்கத்துடன் தெரிவித்துள்ளார்.