அட்டாரி: இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல அட்டாரி – வாகா எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இனிப்புகள் மற்றும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராகிம் நெடுநாட்களுக்கு பிறகு தமக்கு பிறந்த மகன் இஸ்மாயிலை கனவில் கிடைத்த இறைவனின் கட்டளையை மதித்து உயிர்ப்பலி கொடுக்கத் துணிந்தார். தமக்காக மகனையே தியாகம் செய்யத் துணிந்த இறைதூதரை எண்ணி வியந்த இறைவன், உடனடியாக வானவரை அனுப்பி இஸ்மாயில் பலிகொடுக்கப்படும் நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன், அதற்குப் பதிலாக ஆட்டைக் கொடுத்து பலியிடும்படி கேட்டுக் கொண்டார். இறைதூதர் இப்ராகிமின் தியாக உள்ளத்தைப் பாராட்டும் விதமாகவே உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது.
இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதை இந்த திருநாள் வலியுறுத்துகிறது. அதற்காகத்தான் ஆடு, மாடு ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதன் மூலம் கிடைக்கும் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பக்ரீத் வலியுறுத்துகிறது.
பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று அதிகாலையில் டெல்லியில் உள்ள ஜமா மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். டெல்லி மட்டுமல்லாது மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்த பின்னர் ஒருவரையொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
அதேபோல அட்டாரி – வாகா எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இனிப்புகள் மற்றும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். கடந்த சில நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் போதைப்பொருட்கள் ட்ரோன்கள் மூலம் கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பாதுகாப்புப்படையினர் இதனை வெற்றிகரமாக தடுத்து வருகின்றனர். இச்சம்பவங்கள் இரு தரப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்நிலையில், பக்ரீத் தினமான இன்று இனிப்புகள் மற்றும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.