சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கவுள்ளது.
பணமோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது. இதையடுத்து, தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி நள்ளிரவில் கதறி அழுதார் செந்தில் பாலாஜி. இதன் தொடர்ச்சியாக, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.
அதன் பிறகு, காவேரி மருத்துவமனையில் மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இதனால் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, அமலாக்கத்துறை தனது கணவரை சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அந்தக் காவலை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார்.
இதில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஜூலை 4-ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.