மேகதாது அணை: டெல்லி செல்லும் துரைமுருகன் – நாட்டாமை டூ பங்காளி!

மேகதாது அணை ஏன் கூடாது என்பதை காரணத்தோடு கர்நாடகாவிடம் விளக்குவோம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காவேரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஜூன் மாதம் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரையும் வழங்கவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அண்மையில் ஆட்சியமைத்துள்ள நிலையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திமுகவுக்கு எதிகாரக பேசத் தொடங்கியுள்ளன.

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் பேசி மேகதாது பிரச்சினைக்கு முடிவுகட்ட கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “கர்நாடக அரசு ஜூன் மாதம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கவில்லை. தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க கர்நாடக அரசை காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்த வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் . ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் 2.83 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை வழங்காததால் 6.357 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசுடன், கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம். அது தமிழ்நாட்டின் இடம். அவர்களால் அணை கட்ட முடியாது. மேகதாது அணை ஏன் கூடாது என்பதை காரணத்தோடு கர்நாடகாவிடம் விளக்குவோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.