சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் ஜூலை 6ம் தேதி முதல் ஒரு வருட காலத்துக்கு போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மெட்ரோ ரயில் பணிகள் லைட் ஹவுஸ் பகுதியில் நடைபெற்று வருகின்றன. இதில் காந்தி சிலைக்கு பின்புறம் உள்ள மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையின் 7.02 மீட்டர் அகலம் மற்றும் 480 மீட்டர் நீளம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பயன்படுத்த இயலாது. இதன் காரணமாக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் ஜூலை 6ம் தேதி முதல் ஒரு வருட காலத்துக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
> லூப் ரோடு மற்றும் காமராஜர் சாலையிலிலிருந்து வரும் வாகனங்கள் லைட் ஹவுஸிலிருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக போர் நினைவுச் சின்னம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக, அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
> போர் நினைவு சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக லைட் ஹவுஸை நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
> லைட் ஹவுஸிலிருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்குப் பின்னால் தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம். அதன்பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் யூ-டர்ன் செய்து லைட் ஹவுஸ் வந்தடைந்து, வலதுபுறம் திரும்பி காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
> போர் நினைவுச் சின்னத்திலிருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்குப் பின்னால் உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம். அதன்பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர்கள் யூ-டர்ன் செய்து இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம். வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.