ஹீரோயின் ஆசை இல்லாத நடிகை
சினிமாவில் நடிக்க வரும் எல்லா இளம் பெண்களுக்குமே என்றாவது ஒரு நாள் ஹீரோயினாக நடித்து விட வேண்டும் என்ற ஆசை, கனவு இருக்கும். ஆனால் தற்போது குணசித்ர நடிகையாக வளர்ந்து வரும் ஷாலினி சரோஜுக்கு ஹீரோயின் ஆசை இல்லை என்கிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடித்த 'கண்ணே கலைமானே' படத்தில் அறிமுகமானவர் ஷாலினி. அதன்பிறகு கன்னி மாடம், குழலி படத்தில் நடித்தார்.
தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் ஷாலினி கூறும்போது “ சினிமாவில் நடிக்க வேண்டுமென்பது சிறு வயது முதலே எனது கனவு. எனக்கு நாயகியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இல்லை. எனக்கு தரும் பாத்திரங்களை நான் சிறப்பாக செய்ய வேண்டும். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக செய்ய வேண்டும். மனோரமா மேடம் என் ரோல் மாடல் அவர் முயன்று பார்க்காத பாத்திரமில்லை, கோவை சரளா மேடமும் அப்படித்தான்.
காமெடி, வில்லி என நடிக்க ஆசை. தற்போது, சசிகுமார் படமான 'தமிழ்குடிமகன்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளேன். லைகா தயாரிப்பிலும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளேன். நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து, அனைவரும் பாராட்டும் நடிகை ஆக வேண்டுமென்பதே என் கனவு” என்கிறார்.