ஐ.சி.சி உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்தை 128 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றிபெற்றது.
ஹராரேயில் நேற்று (09) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பலில் சஹன் ஆரச்சிகே 71 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி ஸ்திரமான ஓட்டங்களை பெற உதவினார். ஆரச்சிகே ஆடிய இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இதுவாகும். குசல் மெண்டிஸ் 52 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றார்.
இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழ, 23.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்றது.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு டில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஐசிசி உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப்போட்டியில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.