ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2 மணி 37 நிமிடம் 17 வினாடிகளில் சந்திராயன் -3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. இதற்காக இன்று பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்க உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான இஸ்ரோ, நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை கடந்த 2019 ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.
அதேநேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ ரூ.615 கோடியில் சந்திராயன் -3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டனர்.
இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் அதன் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டனர். இதற்கிடையே சந்திராயன் -3 விண்கலத்தை ஏவுவதற்கான திட்ட ஒத்திகை நிகழ்வும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து இன்று பகல் 1 மணிக்கு சந்திராயன் – 3 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்குகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2 மணி 37 நிமிடம் 17 வினாடிகளில் சந்திராயன் -3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. இதற்காக இன்று பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்க உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திராயன்-3 விண்கலத்தின் மூலமாக, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.