பெங்களூரு இரட்டை கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜி நெட் உரிமையாளர் கைது

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் போட்டி நிறுவனமான ஜி நெட்
உரிமையாளர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் உள்ள ஏரோனிக்ஸ் தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ) வினு குமார் (40), நிர்வாக இயக்குநர் (எம்.டி) பனீந்திர சுப்ரமண்யா (36) ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை அலுவலகத்திலேயே வெட்டி கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படைப் போலீஸார் சிசிடிவி காட்சிகளின் மூலம் சபரீஷ் (27), வின‌ய் ரெட்டி (23) மற்றும் சபரீஷின் நண்பர் சந்தோஷ் (26) ஆகிய 3 கொலையாளிகளையும் அடையாளம் கண்டனர். இதைத் தொடர்ந்து 3 பேரின் செல்போன் டவர் மூலம் புதன்கிழமை மாலையில் கைது செய்த‌னர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை), 120 பி (கூட்டுசதி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து 3 பேரையும் பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 8 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர். தனிப்படை போலீஸார் 3 பேரையும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், கைதான சபரீஷ், வினய் ரெட்டி ஆகிய இருவரும் ஜி நெட் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் பனீந்திர சுப்ரமண்யா மற்றும் வினுகுமாருடன் கடந்த ஆண்டு நவம்பர் வரை ஜி நெட் நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். தொழில் போட்டிக் காரணமாக இந்த கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் சபரீஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் ஜி நெட் நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை பிடிக்க தேடிய போது, வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமிட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அருண்குமாரை நேற்று பிற்பகல் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்தனர்.

இதற்கிடையே தனிப்படை போலீஸார் இவ்வழக்கில் தொழில் பகை தவிர வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.