லண்டன்,
இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பல்விந்தர் சிங் புல் (வயது 48). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள எல்லையோர நகரமான டோவரில் காரில் சென்று கொண்டிருந்தபோது எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து, அவரது காரை சோதனை செய்தபோது, காருக்குள் இந்திய அகதிகள் 3 பேரை மறைத்து வைத்து சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல்விந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் அதே டோவர் நகரில் மற்றொரு இந்திய வம்சாவளியான ஹர்ஜித் சிங் தலிவால் என்பவர் 4 இந்திய அகதிகளை காரில் மறைத்து கடத்தி வந்தபோது எல்லை பாதுகாப்பு படையிடம் சிக்கினார். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு லண்டன் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை நடந்தது. அப்போது பல்விந்தர் சிங் மற்றும் ஹர்ஜித் சிங் ஆகிய இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.