சக இனங்களை எதிர் நிலைப்படுத்தும் அரசியலால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடப்போவதில்லை 

வாக்கு வேட்டைக்காக இனத்துவ நிலைப்பட்டு மக்களை சிந்திக்கத் தூண்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சரும் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஏ32 பிரதான வீதியில் பல்லவராயன் கட்டு வேரவில் வரையான வீதி புனரமைப்புக்காக நேற்று (16) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமது பல்வேறு தேவைகளுக்காக இவ்வீதியை நாளாந்தம் பயன்படுத்தும் கிராஞ்சி, வலைப்பாடு வேரவில், பொன்னாவெளி மக்களின் தேவைகளை இனங்காணவும் அவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்குமாக பல தடவைகள் நான் மேற்கொண்ட பயணங்களில் இந்த வீதியை புனரமைப்பதற்கான வேண்டுதல்களே பிரதானமாக முன்வைக்கப்பட்டிருந்தன.

மாற்று தரப்பினர் இவ்வீதி புனரமைப்பை அரசுத்தரப்பு கவனம் செலுத்தாதிருப்பதாக கூறி இதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளையும் இனத்துவ நிலைப்பட்டு மக்களை சிந்திக்கத் தூண்டி கையில் கிடைத்ததையும் தட்டி வீழ்த்தும் அரசியலை தொடர்ந்தார்களே தவிர எனது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பவர்களாக எந்த தமிழ் தலைவர்களும் முன்வரவில்லை.

எதையாவது மக்களுக்கு கிடைக்கச்செய்து அதனை தமக்கு வாக்காக மாற்றுவதற்கு பதில் எதுவும் தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் அதனை சிங்கள தேசத்துக்கெதிராக தமிழ் மக்களை சிந்திக்க தூண்டி தமது வாக்கு வங்கியை பாதுகாக்க முயன்றமையே தமிழ் மக்களின் அரசியல் வரலாறாக இன்று வரை தொடர்கிறது.

இது மக்களின் மனங்களில் வெறுப்பையும் விரக்தியையும் தூண்டி சக இனங்கள் நாட்டில் இருக்கும் வரை தமிழ் மக்களின் வாழ்வில் விடிவு ஏற்படாது என்கிற சுலோகத்தையே யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட இந்த 14 ஆண்டு காலத்தின் பின்பும் வலிந்து திணிக்க முற்படுகிறார்கள்.

இந்த சுலோகத்தை தமிழ் தேசத்தின் தலைவர்கள் அனைத்து இன மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க இணைந்து பயணிப்போம் என்பதாக மாற்றி உச்சரிக்காமல் எமது மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடப்போவ தில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.