பொன்முடியிடம் துருவி துருவி விசாரணை.. கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக விளக்கம் கேட்கும் அமலாக்கத்துறை.. என்ன நடக்கும்?

சென்னை:
அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு ஆஜரான அமைச்சர் பொன்முடியிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, அவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்படுகின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி உள்ளிட்ட 6 பேர் மீது 13 ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், அமலாக்கத்துறை இந்த வழக்கை அதிரடியாக கையில் எடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக, நேற்று காலை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் விக்கிரவாண்டி தொகுதி எம்.பியுமான கவுதம சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

13 மணிநேரத்துக்கும் மேலாக இந்த சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத கோடிக்கணக்கான பணமும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் அடிப்படையில், மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக பொன்முடியை நேற்று இரவு 9 மணிக்கு அமலாக்கத்துறையினர் தனது அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது தாங்கள் கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் பணம் தொடர்பாக பல கேள்விகள் அவரிடம் எழுப்பட்டன. ஆனால், அவற்றில் சில கேள்விகளுக்கு பதிலளிக்க பொன்முடி அவகாசம் கோரினாராம்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறி பொன்முடி நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டார். அதன்படி, இன்று மாலை சரியாக 4 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி ஆஜரானார். அவரது மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் வந்திருந்தார். தொடர்ந்து, அவர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் சென்றனர். ஒரு மணிநேரமாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணக்கில் வராத பணம், நில ஆவணங்கள் தொடர்பாக அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.