இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தேவையான செயற்பாடுகளை நிறைவு செய்வதே ஜனாதிபதியின் எதிர்வரும் இந்திய விஜயத்தின் எதிர்பார்ப்பு என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு இரு மாநிலங்களுக்கு இடையிலான கடன் மறுசீரமைப்புத் திட்டம், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு கலந்துரையாடல்களை அவர் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.