சமூகநீதி, அரசியல் சார்ந்து படம் எடுப்பதற்கு போதிய அறிவு இல்லை – லோகேஷ் கனகராஜ்

விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள படம் ‛லியோ'. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூரலிகான் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிந்தது. அக்., 19ல் படம் வெளியாக உள்ளது. கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார் லோகேஷ்.

பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த லோகேஷ், ‛‛லியோ திரைப்படம் தற்போது தான் நிறைவடைந்துள்ளது. அதன் வெளியீடு குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியுடன் படம் பன்னுவது குறித்து தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். இரும்புகை மாயாவி திரைப்படம் எனது லட்சியத் திரைப்படம். அதற்கு காலம் தேவை. எனக்கு பெரிதாக ஆசை இல்லை. பத்து திரைப்படங்கள் வரை இயக்க வேண்டும் என எண்ணியுள்ளேன். பத்தாவது படம் முடிந்தவுடன் விலகி விடுவேன்.

கோவையில் திரைத்துறையில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவேன். இதற்கான பணிகளில் முதலாவதாக முன்வருவேன். நம் மனதுக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்வது தான் வாழ்க்கை.

லியோ படத்தில் அரசியல் வசனங்கள் எதுவும் இல்லை. சமூக நீதி அரசியல் சார்ந்து படம் எடுப்பதற்கு அதிக அறிவு வேண்டும். எனக்கு போதிய அறிவு இல்லை. எதையும் அறை, குறையாக தெரிந்து கொண்டு பேசினால் ஆபத்தில் முடியும். விஜய் தனிப்பட்ட நபராக பல நல்ல விசயங்கள் செய்கிறார். அதனால் அவரை மிகவும், பிடிக்கும். விஜய் தெரிவித்தால், மூன்றாவதாக அவருடன் இணைவேன்.

சினிமாவில் இருக்கும் வரை, ரசிகர்கள் கொடுக்கும், 150 ரூபாய்க்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் பணிபுரிகிறேன். அது தான் நியாயமும் கூட. நான் இல்லாத இடத்தை வேறு ஒருவர் நிரப்புவார். விரைவில் ஒரு படம் இயக்க உள்ளேன். அதன்பின், கைதி 2 படம் கட்டாயம் இயக்குவேன்.

நடிகர் அஜித் உட்பட அனைவருடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். ஒரு திரைப்படம் பலரது உழைப்பில் உருவாகிறது. அதை உணர்ந்தால், திரைப்படங்கள் வெளியானதும் சமூக வலைதளங்களில் வெளியிடுவது இருக்காது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.