மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி,

மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடுமையை பற்றி விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவையிலும் பிரதமர் மோடி பேசவேண்டும் என்றும், பிரதமர் மோடி அவைகளில் பேசிய பிறகே நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் எனவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியை சேர்ந்த 26 கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தனது டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.