ரஜினி, விஜய் கைவிட்டனர்: தெலுங்கு படம் இயக்கும் சிபி சக்ரவர்த்தி
இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படத்தை இயக்கினார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வசூலையும் கொடுத்தது. படத்தை பார்த்த ரஜினியும், விஜய்யும் சிபி சக்ரவர்த்தியை அழைத்து பாராட்டியதோடு அவர் இயக்கத்தில் நடிக்க விருப்பம் கொண்டு கதையும் கேட்டனர். ஆனால் இதுவரை ஒப்புதல் தரவில்லை.
இவர்களிடமிருந்து அழைப்பு வரும் என்று ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருந்த சிபி தற்போது தெலுங்கு படத்தை இயக்க இருக்கிறார். நானி நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் பேச்சு வார்த்தைகள் முடிந்திருக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் தயாராகும் என்று தெரிகிறது.