தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரிச்சலுகை : தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் முதல்வரிடம் கோரிக்கை

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி என்.ராமசாமி, செயலாளர்கள் கதிரேசன், ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, துணைத்தலைவர் கே.ராஜன், தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர்.

பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தை காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 4 ஆயிரம் தியேட்டர்கள் இருந்தன. ஆனால் தற்போது ஆயிரமாக குறைந்துவிட்டன. ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட தியேட்டர்களில் கூட தற்போது 100 முதல் 150 பேர்தான் படம் பார்க்க வருகின்றனர். எனவே ஒரு திரையுடன் உள்ள பெரிய திரையரங்கத்தை, நான்கு திரைகள் கொண்ட திரையரங்கமாக மாற்ற பொதுப்பணித்துறை சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும். ஒரு திரையை 3 அல்லது 4 திரைகளாக மாற்றி விட்டால் சிறு பட்ஜெட் படங்களை திரையிட கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.

திரையரங்கங்களில் 100 ரூபாய் வரையிலான டிக்கெட்களுக்கு 12 சதவிகிதமும், 100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18 சதவிகிதமும் ஜி.எஸ்.டி. வரியாக விதிக்கப்படுகின்றது. இவற்றுடன் கூடுதலாக தமிழ்நாடு அரசால் 8 சதவீதம் உள்ளாட்சி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பால் திரைப்படத் துறையினர், விநியோகஸ்தர்கள் யாருக்கும் லாப, நஷ்டம் இல்லை. ஆனால் அந்த வரி உயர்வு பொதுமக்கள் மேல் விழுகிறது. எனவே, 8 சதவீத உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும். இந்த வரி நீக்கப்பட்டால் டிக்கெட் கட்டணத்தில் 8 சதவீதம் குறையும்.

முன்பு வழங்கப்பட்டது போன்று தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மானியம், வரிச்சலுகையை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.