பள்ளி மாணவர்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசால் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. பஸ் பாஸ் திட்டத்தில் இந்த ஆண்டு முதல் இணைய வழியில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் காலதாமதமும் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு அந்த முறையை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் பழைய முறைப்படி நேரடியாக வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வெ.ஜெயக்குமார் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், “பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகள் 1 முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பேருந்து பயண அட்டை இணைய வழியே வழங்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் நேரடியாக அட்டையைப் பெறும் பழைய நடைமுறையை பின்பற்றும் படி அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி இலவசப் பேருந்து பயண அட்டை பெற மாணவ, மாணவிகளின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களைப் பெற பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட மண்டல போக்கிவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் உடனே சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை கூகுள் ஷீட்டில் பூர்த்தி செய்து தொகுப்பு அறிக்கையை அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் அந்ததந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இது தொடர்பான உத்தரவுகளை வழங்கியுள்ளனர். இதனால் பழைய முறைப்படியே விரைவில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட உள்ளது.