தருமபுரி: யாருக்கெல்லாம் 1000 ருபாய் தேவையோ அவர்களுக்கு எல்லாம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசிய போது, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கான விண்ணப்பபதிவு முகாம்கள் இனி வரும் நாட்களில் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. மகளிரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற சிறப்பு முகாம்கள் நடத்த முதலமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர் வரை பயன் பெறுவார்கள் என அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஒரு கோடி மகளிரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூபாய் 1,000 உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இதற்காக இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது ரூபாய் 7 ஆயிரம் கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது.
இதனிடையே இன்றைய தினம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவு முகாமை தொடங்கி வைத்து பேசினார். 1989ஆம் ஆண்டு கருணாநிதி தொடங்கி வைத்த சுய உதவி குழுக்கள் திட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளது. தருமபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுவதும் முளைக்கும் என்ற நம்பிக்கையில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார். காலை சிற்றுண்டி திட்டம், மாணவிகளுக்கு ரூ. 1000 நிதி உதவி கொடுக்கும் திட்டத்தின் சிறப்புகளை கூறினார். கட்டணமில்லா பேருந்து மூலம் பல லட்சம் மகளிர் பயன்பெறுகின்றனர். நிதி நெருக்கடியில் இருந்தாலும் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைப் பற்றி எதிர்கட்சியினர் பல தவறான கருத்துகளை பரப்புகின்றனர். பெண்களின் சுயமரியாதையை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின். ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கப்படுவதன் மூலம் அவர்களின் சுயமரியாதை பாதுகாக்கப்படும். வறுமையை ஒழிக்க இது சிறிய உதவியாக பயன்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.