அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆக.8 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினர், அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். உடல் நலக் குறைவு காரணமாக அவர், ஓமந்தூரார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.அன்றைய தினம் பிற்பகல், மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அங்கு சிகிச்சை முடிந்த பிறகு ஜூலை 17-ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் புதன்கிழமையுடன் (ஜூலை 26) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு மூன்றாவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.