‛பைண்டர்'-ல் கதை தான் நாயகன் – சார்லி
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “பைண்டர்”. வினோத் ராஜேந்திரன் இயக்கி, தயாரிக்க, நடிகர் சார்லி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர் நடிகை பிரானா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் சார்லி பேசியதாவது : ‛‛இந்த நிகழ்ச்சி எனது மனதிற்கு மிகவும் பெருக்கமானது. இந்தப் படத்தில் பெரிய கதாநாயகன்கள் இல்லை, கதைதான் நாயகன். இந்த படத்திற்காக கடின உழைப்பை கொடுத்துள்ளார் இயக்குனர் வினோத். இந்தப் படம் பலரது உழைப்பில் உருவானது. படம் நன்றாக வந்துள்ளது, அனைவரும் ஆதரவு தாருங்கள்,'' என்றார்.
வினோத் ராஜேந்திரன் பேசியதாவது, ‛‛நாங்கள் நினைத்ததை சுவாரஸ்யமான படமாக உருவாக்கியுள்ளோம். இருக்கை நுனியில் ரசிகர்களை இருத்தி வைக்கும் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்,'' என்றார்.