2022 மார்ச் 28 ஆம் தேதி, பாலா இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி, மமிதா உட்பட பலர் நடிப்பில் வணங்கான் படம் தொடங்கப்பட்டது.
முதல்கட்ட படப்பிடிப்புக்குப் பின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு பற்றிய செய்தி வரும் என்று பார்த்தால், டிசம்பர் 4, 2022 அன்று இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகச் சொல்லியிருந்தார். அவர் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன்.

ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்தக்கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக்கதையின் மீதும் முழுநம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்துவிடக்கூடாதுஎன்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே, வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி வணங்கான் படப்பணிகள் தொடரும் நன்றி. இவ்வாறு இயக்குநர் பாலா கூறியிருந்தார்.

அவர் சொன்னது போலவே சூர்யாவுக்குப் பதில் வணங்கான் ஆனார் அருண்விஜய். காதுகேட்காத வாய் பேச முடியாத வேடம். சூர்யாவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த செம்பட்டைத்தலை தோற்றம் ஆகியவற்றில் அருண்விஜய்யைப் பொருத்தினார் பாலா. எவ்வித அறிவிப்புமின்றி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இப்போது பெரும்பகுதி படம் நிறைவடைந்திருக்கிறது. கிளைமாக்ஸ் உட்பட இன்னும் சில முக்கியப் பகுதிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம்.சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அருண்விஜய் பொருந்துவாரா? என்கிற எண்ணம் பலருக்கும் இருக்கும். இதுவரை எடுத்த காட்சிகளைப் போட்டுப் பார்த்திருக்கிறார்கள்.
அருண்விஜய் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறாராம். செம்பட்டைத்தலைத் தோற்றம் மட்டுமின்றி உடல்மொழியிலும் பெரிய அளவில் மெனக்கெடலுடன் நடித்திருக்கிறார். நடப்பது, ஓடுவது போன்ற காட்சிகளிலும் இதுவரை பார்த்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்டுத் தெரிகிறாராம் அருண்விஜய். இந்தப்படத்தில் அவருடைய நடிப்புக்கு உரிய அங்கீகாரங்கள் நிச்சயம் என்கிற நம்பிக்கை படக்குழுவினர் மொத்தப்பேரிடமும் இருக்கிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்புக்காகக் காத்திருக்கும் வணங்கான் அருண்விஜய்யின் நடிப்புப் பயணத்தில் அடுத்தகட்ட பெரும்பாய்ச்சலாக இருக்கும் என்கிறார்கள்.