நாமக்கல்: கோவையைச் சேர்ந்த முதியவருக்கு எய்ட்ஸ் உள்ளதாக தவறாக தெரிவித்த தனியார் கண் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (71). கடந்த 2017 டிசம்பர் மாதம் கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் கண் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் கண்களை பரிசோதித்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு முன் ரத்தம் மற்றும் சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த பரிசோதனைகள் அம்மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மற்றொரு தனியார் மருத்துவமனையிலும் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துள்ளார். இதில் அவருக்கு எய்ட்ஸ் நோய் எதுவும் இல்லை என மருத்துவ அறிக்கையை வழங்கி உள்ளனர்.
இதனால் பாதிப்புக்கு உள்ளான கிருஷ்ணசாமி கடந்த 2018ம் ஆண்டு கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தனியார் கண் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விரைவான விசாரணைக்காக கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கின் மீது நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி கவனக்குறைவுடன் செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வீ.ராமராஜ் உத்திரவிட்டார். இந்த அபராத தொகையை 4 வார காலத்திற்குள் வழக்கு தொடர்ந்த கிருஷ்ணசாமிக்கு வழங்க வேண்டுமெனவும் உத்திரவிட்டார்.