NDAஆ? INDIAஆ? பெரிய குண்டை தூக்கி போட்ட சந்திரசேகர் ராவ்… 50 வருஷ இந்திய அரசியல் ஸ்வாகா!

2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கின்றன. முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் மத்தியில் ஆளும் பாஜக அசுர பலத்துடன் இருப்பதாக ஒரு பிம்பம் காணப்படுகிறது. சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும் பிரதமர் மோடி தலைமையில் பாஜக தனிப்பெரும்பான்மை உடன் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என்று தெரிவித்துள்ளன.

மக்களவை தேர்தல்

கடந்த 2019 தேர்தலில் பாஜக தனித்து 303 இடங்கள் என்றால், 2024ல் 313ஆக அதிகரிக்கும் எனக் கூறி பரபரப்பை கொளுத்தி போட்டுள்ளன. எனவே எதிர்க்கட்சிகள் விரைவாக தங்களை வலுப்படுத்தி கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பாட்னா, பெங்களூரு ஆகிய நகரங்களில் ஆலோசனை நடத்தி இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி (INDIA) என்ற பெயரில் கைகோர்த்துள்ளனர்.

இருபெரும் கூட்டணிகள்

இவர்கள் வசம் 26 கட்சிகள் இருக்கின்றன. மறுபுறம் 38 கட்சிகள் தங்கள் வசமிருப்பதாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி செய்தது. இதற்கிடையில் எந்த கூட்டணியிலும் சேராத கட்சிகள் சில இருக்கின்றன. அதில், ஒய்.எஸ்.ஆர்
காங்கிரஸ்
, பிஜு ஜனதா தள், பாரதிய ராஷ்டிர சமிதி, தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகள் அடங்கும். டெல்லி அரசுக்கு எதிரான அவசர சட்ட மசோதாவிற்கு மத்திய அரசுக்கு ஆதரவாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிற்பதால், இக்கட்சி பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதை பார்க்க முடிகிறது.

பாரதிய ராஷ்டிர சமிதியின் முடிவு

வெளியில் இருந்து கூட ஆதரவு தெரிவிக்கலாம். இதன் காரணமாக தெலுங்கு தேசம் கட்சியை பாஜக ஹோல்டில் வைத்துள்ளது. இவர்களை தவிர்த்து ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருக்கும் பெரிய கட்சி என்றால் பாரதிய ராஷ்டிர சமிதி தான். தனது கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்வது, பிரதமர் நாற்காலிக்கான கனவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கட்சி பெயரை சமீபத்தில் தான் மாற்றியிருந்தார் சந்திரசேகர் ராவ்.

எந்த கூட்டணியில் சந்திரசேகர் ராவ்

சந்திரசேகர் ராவ் தேசிய அளவில் தனித்து ஆட்சியை பிடிப்பது கடினம். அப்படியிருக்கையில் யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுந்து வந்தது. நேற்றைய தினம் (ஆகஸ்ட் 1) மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு பதிலளித்தார். அதாவது, NDA கூட்டணியிலும் இல்லை. INDIA கூட்டணியிலும் இல்லை. எந்த கூட்டணிக்கும் போகவும் விரும்பவில்லை.

மூன்றாவது அணிக்கு வாய்ப்பு

எங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள். எங்களுடன் வந்து இணைவார்கள். நமது நாட்டு மக்கள் NDA, INDIA என இரண்டு கூட்டணியையும் பார்த்து விட்டார்கள். புதிய இந்தியா பிறந்து விட்டதா? 50 ஆண்டுகளாக இவர்கள் தான் ஆட்சி செய்தார்கள். ஆனால் எதுவும் மாறவில்லை. நாங்கள் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று அதிரடியாக பேசினார். இதனால் INDIA கூட்டணி கட்சிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளன. அதுமட்டுமின்றி மூன்றாவது அணிக்கான சூழல் ஏற்பட்டுள்ளதால் வாக்குகள் பிரிந்து பாஜக மீண்டும் வெற்றி பெறுவதற்கான நிலை வரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.