நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பாரா ராகுல் காந்தி? அடுத்தடுத்து காத்திருக்கும் டிவிஸ்ட்!

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜக எம்,எல்.ஏ புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அதிகப்பட்ச தண்டனையாக ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல் முறையீடு செய்தார். சூரத் நீதிமன்றத்தில் தீர்ப்பு சரிதான் என கூறி ராகுலின் மேல் முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை உச்சநீதிமன்றத்தை நாடினார் ராகுல் காந்தி.

இந்த வழக்கில் சூரத்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. ராகுல்காந்திக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கியது ஏன் என்று சூரத் நீதிமன்ற நீதிபதி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இந்த அதிகப்பட்ச தண்டனையால் தொகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவருக்கு எம்பி பதவி மீண்டும் கிடைத்துள்ளது. இதனால் நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ராகுல் காந்தி பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தில் பங்கேற்க மக்களவை செயலகம் அவரது தகுதி நீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

அதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட வேண்டும். அதாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலுடன் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுத வேண்டும். அந்த கடிதத்தின் அடிப்படையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்ப பெற்றால் ராகுல் காந்தி நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் உடனடியாக பங்கேற்கலாம்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை திரும்பப்பெறுமாறு மக்களவை சபாநாயகருக்கு உடனடியாக கடிதம் எழுதப்படும் என தெரிவித்துள்ளார். இன்று மாலையே கடிதம் எழுதப்படும் நிலையில் மக்களவை செயலகம் எத்தனை நாட்களில் தகுதி நீக்கத்தை திரும்ப பெறுகிறது என்பதை பொறுத்து வரும் நாட்களில் ராகுல் காந்தி நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.