தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த ஒரு வார காலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் இன்றைய தினத்துக்கான மழை பற்றிய முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
புதுகோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், தருமபுரி, சேலம், நீலகிரி, கோவை, ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் வியாழக் கிழமை (ஆகஸ்ட் 10) வரை தமிழ்நாடு புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் (ஆகஸ்ட் 4) நாளையும் (ஆகஸ்ட் 5)ஆம் தேதி வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மஞ்சளார் அணையின் நீர்மட்டம் 47 அடியாக சரிவு
அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை. அதிகபட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.