மும்பை மீட்டிங்கும், கருத்துக்கணிப்பு முடிவுகளும்… ’இந்தியா’ கூட்டணி என்ன செய்யப் போகிறது?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (NDA) எப்படியாவது வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ”இந்தியா” (INDIA) என்ற பெயரில் மெகா கூட்டணியை அமைத்துள்ளனர். இதில் 28 அரசியல் கட்சிகள் கைகோர்த்துள்ளன. பாட்னாவில் முதல் கூட்டமும், பெங்களூருவில் இரண்டாவது கூட்டமும் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் மூன்றாவது கூட்டத்தை மும்பையில் நடத்த முடிவு செய்தனர். இதற்கான தேதி எப்போது? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது பதில் கிடைத்துள்ளது.

இந்தியா கூட்டணி ஆலோசனை

ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணி போதிய வெற்றியை பெற்று தருமா? என்பது கேள்விக்குறி தான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதற்கு முக்கிய காரணம், இன்னும் சில முக்கியமான கட்சிகள் வெளியே நிற்கின்றன.

மக்களவை தேர்தல் 2024 கருத்துக்கணிப்பு முடிவுகள்; தமிழ்நாட்டில் NDAவா, INDIAவா… எந்த கூட்டணிக்கு வெற்றி?

தனித்து நிற்கும் தலைவர்கள்

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் இரண்டு கூட்டணிகள் உடனும் சேர மாட்டேன் என்று கறாராக கூறி விட்டார். தங்களுக்கும் சில நண்பர்கள் இருப்பதாக தெரிவித்தார். இதன்மூலம் 3வது அணி அமைவது உறுதியாகி இருக்கிறது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி உள்ளிட்டோரும் யாருடனும் கைகோர்க்காமல் உள்ளனர். இவ்வாறு தனித்து நிற்பது பாஜகவின் வெற்றிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

பலம் வாய்ந்த பாஜக

ஏற்கனவே பாஜக 303 இடங்களுடன் தனிப் பெரும்பான்மை பெற்று காணப்படுகிறது. கூட்டணியாக பார்த்தால் 353 இடங்கள். வரும் 2024 மக்களவை தேர்தலிலும் மோடி அலையை முன்னிறுத்த பலமான வியூகங்கள் தயாராகி வருகின்றன. தென்னிந்தியாவில் பிராந்திய கட்சிகள் பலம் பெற்று விளங்குகின்றன. ஆனால் வட இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜகவிற்கு சாதகமான சூழல் நிலவுவதாக தெரிகிறது.

கருத்துக்கணிப்பு முடிவுகள்

இதற்கிடையில் இந்தியா டிவி நடத்திய முக்கியமான கருத்துக்கணிப்பில், பாஜக தனித்தே 290 இடங்களை பிடித்துவிடும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் 272 இடங்கள் இருந்தால் போதும். ஆட்சியை பிடித்து விடலாம். இதேபோல் இந்தியா கூட்டணிக்கு வெறும் 175 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

மக்களவை தேர்தல் 2024

இதுதவிர மாநில கட்சிகள், சுயேட்சைகள் என 50 பேரை சேர்த்தால் கூட இந்தியா கூட்டணியால் ஆட்சியை பிடிக்க முடியாது எனத் தெரிகிறது. இந்த கருத்துக்கணிப்பு என்பது இன்றைய தேதிக்கு தேர்தல் வந்தால் மக்கள் யாருக்கு வாக்களிப்பர் என்பது தான். தேர்தல் வருவதற்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கின்றன. இருப்பினும் கருத்துக்கணிப்பை சாதாரணமாக கடந்து விட முடியாது.

வேகமெடுக்குமா இந்தியா?

இதை கவனத்தில் வைத்து மும்பையில் நடக்கும் 3வது கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களின் தேர்தல் வேலைகளை விரைவுபடுத்த வேண்டும். பாஜகவை மக்கள் மன்றத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கும் வகையில் ஒரு விஷயத்தை கையிலெடுத்து பூதாகரமாக்க வேண்டும். ஆனால் அப்படியான சூழல் மில்லியன் டாலர் கேள்வி தான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.