திமுக மா.செ.க்கள் கூட்டம்: கட்சியினரை உஷார் படுத்திய முதல்வர் ஸ்டாலின்

மாவட்டச் செயலாளர்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அந்த வகையில் இன்று காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் இணைந்தனர். முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மற்றும் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, இளையோர் மத்தியில் கலைஞரை கொண்டு செல்லும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவுகள் சென்றுள்ளன.

பாஜக அரசு திமுகவை குறிவைத்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற ஏஜென்சிகளை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதற்கு வலு சேர்க்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விரைவில் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை காய் நகர்த்தி வருகிறது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகியோர் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அடுத்து எந்த அமைச்சரை குறிவைத்து அமலாக்கத்துறை நடவடிக்கையில் ஈடுபடும் என்று விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பான அறிவுறுத்தல்களை கட்சியினருக்கு வழங்கினார்.

“பாஜகவை பொறுத்தவரையில் இது அவர்களுக்கு வாழ்வா சாவா என்ற தேர்தல். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்வார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்திருக்கிறது. அதனால் கோபம் அதிகமாகும், நம்மை நோக்கி பாய்வார்கள்” என்று ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.