இஸ்லாமாபாத்,
தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனால் இம்ரான்கான் தனது எம்.பி. பதவியை இழந்துள்ளார். மேலும் இஸ்லாமாபாத் விசாரணை கோர்ட்டு அவரை குற்றவாளி என்று அறிவித்த சிறிது நேரத்திலேயே, லாகூரில் உள்ள அவரது ஜமான் பார்க் இல்லத்திற்குள் புகுந்து பஞ்சாப் காவல்துறையினர் இம்ரான் கானை அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்படுவதற்கு முன்பு இம்ரான் கான் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், “எனது கைது எதிர்பார்க்கப்பட்டது தான். கைது செய்யப்படுவதற்கு முன்பு இந்த செய்தியை நான் பதிவு செய்தேன். எனது கட்சியினர் அமைதியாகவும், உறுதியுடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.