திருப்பதி வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை… அலறியடித்து ஓடிய பயணிகள்!

திருப்பதி-செகந்திராபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ எச்சரிக்கை அலாரம் ஒலிக்கப்பட்டதை அடுத்து அந்த ரயில் அவசர அவசரமாக நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. திருப்பதி-செகந்திராபாத் வந்தே பாரத் ரயில் (எண் 20702) கடந்த புதன்கிழமை ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை கடந்தபோது அதன் 13 வது கோச்சில் இருந்து திடீரென புகை கிளம்பியது.

குபுகுபுவென கிளம்பிய புகை அந்த கோச் முழுவதும் பரவியது. இதனை தொடர்ந்து தீ எச்சரிக்கை அலாரமும் ஒலித்தது. புகை வருவதை உணர்ந்த ரயிலின் லோகோ பைலட் உடனடியாக மனுபோலு என்ற கிராமத்தில் ரயிலை நிறுத்தினார். பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.

இதையடுத்து ரயில்வே போலீசார் தீயை அணைக்கும் பொருட்களுடன் ரயிலில் ஏறினர். அப்போது சி 13 கோச்சின் டாய்லெட்டுக்குள் சென்ற பயணிதால் தீ விபத்தில் சிக்கியதாக ஜன்னலை உடைத்து அவரை காப்பாற்றினர். ஆனால் அந்த பயணி டிக்கெட் எடுக்காமல் டாய்லெட்டில் அமர்ந்து பயணித்ததோடு, சிகரெட் பிடித்து அதனை அங்கிருந்த பிளாஸ்டிக் பொருள் மீது வீசியுள்ளார்.

இதனால் அந்த பொருள் தீப்பற்றி எரிந்து கோச் முழுவதும் புகை கிளம்பியுள்ளது. இந்த விபத்தில் அந்த நபருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. டிக்கெட் பரிசோதகரிடம் சிக்காமல் இருக்க ரயிலின் கழிப்பறைக்குள் அமர்ந்த பயணி, புகைப்பிடித்து இந்த விபத்தை ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

சமீப காலமாக வந்தே பாரத் ரயில்கள் பயணிகள் மற்றும் வெளி நபர்களால் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்களை சேதப்படுத்த முயற்சிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். திருப்பதி வந்தே பாரத் ரயிலில் திடீரென கிளம்பிய புகையால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.