‛அலைபாயுதே' பாணியில் உருவாகி உள்ளதா ‛குஷி' திரைப்படம் ? – இயக்குனர் விளக்கம்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் ஜோடியாக இணைந்து நடித்துள்ள படம் குஷி. இந்த படத்தை இயக்குனர் சிவா நிர்வானா என்பவர் இயக்கியுள்ளார். வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. குஷி என விஜய் பட டைட்டில் வைக்கப்பட்டிருந்தாலும் இரண்டு படங்களின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே சமயம் இந்தப்படம் தொடர்பாக வெளியான போஸ்டர்கள் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோக்களை பார்த்துவிட்டு பலரும் இது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படம் போலவே இருக்கிறதே என தங்களது சந்தேகங்களை எழுப்பினார்கள்.
இதுபற்றி இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் சிவா நிர்வானா, “அலைபாயுதே மட்டுமல்ல மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் மற்றும் இதேபோல கதை அம்சம் கொண்ட அனைத்து படங்களையும் எடுத்துக் கொண்டால் அதில் காதல் மற்றும் திருமணம் சார்ந்த விஷயங்களை மையப்படுத்தி தான் கதைகள் உருவாகி இருக்கும். காதலையும் திருமணத்தையும் பற்றி ஒரு படத்தை எடுக்கும்போது மேலோட்டமாக பார்த்தால் இந்த விஷயங்களை தவிர்க்க முடியாது. அதே சமயம் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப இதுபோன்று காதல் அல்லது திருமண ஜோடிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை வேறு ஒரு கோணத்தில் இருந்து இந்த படம் அலசுகிறது” என்று கூறியுள்ளார்.