மும்பை அருகிலுள்ள மீரா ரோட்டில் கோச்சிங் கிளாஸ் நடத்தி வருபவர் ராஜு தாக்குர். இவர் காஷ்மிரா என்ற இடத்தில் உள்ள குஜராத்தி சாலில் தனது நண்பர்கள் சிலருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு வந்த 17 வயது வாலிபர் ஒருவர், ராஜு தாக்குருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க ஆரம்பித்தார். இதனை எதிர்பாராத ராஜு தாக்குர் அதனை தடுக்க முயன்றார்.
அருகில் நின்றவர்களும் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த வாலிபர், ராஜு தாக்குரை கீழே தள்ளி வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். ராஜு தாக்குரை அவருடன் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. கத்தியால் குத்திய நபர் நேராக காவல் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்தார்.
போலீஸார் கத்திக்குத்துப்பட்ட ராஜு தாக்குரிடம் விசாரித்ததில், கத்தியால் குத்திய மாணவர் ஆசிரியர் ராஜு தாக்குர் நடத்திய கோச்சிங் கிளாஸில் சேர்ந்து படித்துள்ளார். அப்படி படிக்கும் போது சரியாக படிக்காததால் மாணவனை ஆசிரியர் கண்டித்துள்ளார். அதோடு கோச்சிங் கிளாஸிற்கு வரும் மாணவிகள் சிலருடன் மாணவர் மிகவும் நெருக்கமாக பேசியிருக்கிறார். இதனையும் ஆசிரியர் கண்டித்துள்ளார். சில வாரத்திற்கு முன்பு ஆசிரியர் மாணவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
ஆசிரியர் மாணவனை வகுப்பில் வைத்து அடித்தாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து அவனது பெற்றோர் முன்னிலையில் போலீஸார் விசாரணை நடத்தினர். மாணவன் ஆசிரியரை கத்தியால் குத்தும் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் போலீஸாரிடம் கிடைத்திருக்கிறது. மாணவன் கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஆசிரியரை கண்காணித்து இத்தாக்குதலில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs