தமிழகத்தில் ஒரு வாரம் மழை எப்படி? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஒரு வாரம் மழை நிலவரம் தமிழ்நாட்டிற்கு எப்படி இருக்கும் என்பது குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஆகஸ்ட் 14 )தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று இரவு சென்னை மட்டுமல்லாமல் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் பயங்கர இடி மின்னலுடன் மழை பெய்தது.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

நாளைய தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட் 14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளைய தினமும் (ஆகஸ்ட் 15) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.