தமிழகத்தில் இன்று குடற்புழு நீக்க சிறப்பு முகாம்: 2.69 கோடி பேருக்கு மாத்திரைகள் வழங்க இலக்கு

சென்னை: தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த இரண்டு மாதங்களிலும் நாடு முழுவதும் 19 வயதுக்குட்பட்ட சிறார் மற்றும் 30 வயதுக்குட்பட்ட வளரிளம் பெண்களுக்கு ‘அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் தகுதியான அனைவருக்கும் குடற்புழு நீக்கமாத்திரைகளை வழங்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 17-ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 19 வயது வரை உள்ள குழந்தைகள், சிறார்கள் மற்றும் 20முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் என மொத்தம் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். விடுபட்டவர்களுக்கு மாத்திரை வழங்க ஆக.24-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறஉள்ளது.

குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்ளாதபட்சத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்த சோகை, வயிற்று உபாதைகள், சோர்வு நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் என மருத்துவத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.