இனி நடிக்க மாட்டேன்: 'மாமன்னன்' 50வது நாள் விழாவில் உதயநிதி மீண்டும் உறுதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், வடிவேலு நடித்த மாமன்னன் படம் வெளியாகி நேற்றுடன் 50நாள் ஆனது. இதனை படத் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் நட்சத்திர ஓட்டலில் கொண்டாடியது. படத்தில் பணியாற்றிவர்கள், படத்தை திரையிட்டவர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட சுமார் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மாமன்னன் படம் தொடங்கப்பட்டபோதே இந்த படம் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினேன். இயக்குனர் மாரி செல்வராஜ் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கினார். படப்பிடிப்பில் இரண்டு முறை எனக்கு அடிபட்டது. ஹீரோவுக்கு அடிபட்டால் படம் வெற்றி பெறும் என்று கீர்த்தி சொன்னார். அதுபோலவே வெற்றி பெற்றது.

வடிவேலு இந்த படத்தில் நடிக்க முன்வந்திருக்கா விட்டால் இந்த படத்தை கைவிட்டு வேறு படம் செய்திருப்போம். பஹத் பாசில் இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.
எனது முதல் படமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' வெற்றி பெற்றதும், கடைசி படமான மாமன்னன் வெற்றி பெற்றதும் மறக்க முடியாத அனுபவங்கள். இன்னும் நான் நடிக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டாலும் இனி நடிப்பதாக இல்லை. அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.