நிலவில் தரையிறங்கிய சந்திரயான் – 3 : வியக்கும் உலக நாடுகள்… என்ன சொல்றாங்க தெரியுமா?

சந்திரயான் – 3 லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை இந்தியா முழுவதும் உற்றுநோக்கி வந்தது. லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணிகள் மாலை 5.44 மணிக்கு தொடங்கிய நிலையில், முதற்கட்டமாக லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது. அதன்பிறகு நிலவிற்கு மேற்பரப்பில் இருந்து லேண்டரின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. பின்னர் லேண்டர் நிலை மாற்றும் பணிகள் நடைபெற்றன. வெற்றிகரமாக செங்குத்தான நிலைக்கு மாற்றப்பட்டது.

இந்த திக் திக் நிமிடங்கள் அனைத்தையும் இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக பார்த்து வந்தனர். ஒவ்வொரு கட்ட வெற்றியின்போது கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். இறுதியாக நிலவின் தென் துருவ பகுதியில் லேண்டர் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டது. இதன்மூலம் நிலவின் தென் துருவ பகுதியில் தடம் பதித்த முதல் நாடு என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்துள்ளது. தற்போது புழுதி அடங்குவதற்காக விக்ரம் லேண்டர் காத்திருக்கிறது. புழுதி அடங்கிய பின்னர் லேண்டரில் இருந்து வெளியே வரும் பிரக்யான் ரோவரை விக்ரம் லேண்டர் படம் எடுத்து பூமிக்கு அனுப்பும். இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த சாதனைக்கு உலக நாடுகளின் விண்வெளி நிறுவனங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து விண்வெளி நிறுவனம், “இது ஒரு வரலாற்று தினம். வாழ்த்துகள் இஸ்ரோ” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், “சந்திரயான் – 3 குழுவினருக்கும் இஸ்ரோவுக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நிர்வாகி பில் நெல்சன், “வெற்றிகரமாக சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய 4வது நாடாக மாறிய இந்தியாவுக்கு பாராட்டுகள். இந்த பணியில் உங்கள் பார்ட்னராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம், நிலவின் தென் துருவத்தில் வரலாற்று ரீதியிலான சந்திரயான்-3 தரையிறக்கத்திற்கு வாழ்த்துகள். இது மற்ற நாடுகளுக்கும் உத்வேகம் அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.