பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள `சந்திரமுகி – 2′ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25ம் தேதி) நடைபெற்றது.
சென்னை சோழிங்கநல்லூர் ‘ஜே.பி.ஆர் கல்லூரி’யில் நடைபெற்ற இவ்விழாவில் இயக்குநர் பி.வாசு, ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டபலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவைக் காண ரசிகர்கள் பலரும் அங்கு கூடியிருந்தனர். அதில் சினிமா நட்சத்திரங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பவுன்சர் ஒருவர் கல்லூரி மாணவர் ஒவருடன் தள்ளுமுள்ளு தகராறில் ஈடுபட்டுள்ளார். நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்திற்கு வெளியே இருவருக்குமிடையே நடந்த இந்தத் தகராறு அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விழா முடிந்ததும் இதுபற்றி அறிந்த ராகவா லாரன்ஸ் மிகவும் வருத்தப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்நிலையில் தற்போது இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தவறுதலாக நடந்த இந்தச் சம்பவத்திற்குத் தன் வருத்த்தையும் மன்னிப்பையும் தெரிவித்துள்ளார் ராகாவா லாரன்ஸ்.
Hello everyone, I just came to know about the unfortunate incident which happened during our #Chandramukhi2 movie Audio Launch, where one of the Bouncers involved in a fist fight with a college student.
First of all myself or the organisers were not aware of this incident as it…
— Raghava Lawrence (@offl_Lawrence) August 27, 2023
இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், “‘சந்திரமுகி-2’ இசை வெளியிட்டு விழாவில் பவுன்சர் ஒருவர் கல்லூரி மாணவருடன் சண்டை போட்ட சம்பவம் பற்றி இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. நிகழ்ச்சி உள்ளே நடந்ததால் நானும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தக் குழுவும் அரங்கின் உள்ளே இருந்தோம். அரங்கிற்கு வெளியில் நடந்த இச்சம்பவம் பற்றி எங்களுக்குத் தெரியாது. நான், மாணவர்கள் மீதும், அவர்கள் வளர்ச்சியின் மீதும் எவ்வளவும் அன்பும் ஆசையும் கொண்டவன் என்பது எல்லோருக்கும் தெரியும்.
எப்போதும், எங்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் எல்லோரிடத்திலும் பரப்ப வேண்டும் என்று நினைப்பவன் நான். ஒருபோதும் இதுபோன்ற சண்டைகளை, வாக்குவாதத்தை நான் ஆதரிக்கமாட்டேன். எதுவாக இருந்தாலும் ஒருவரை அடிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, அதுவும் மாணவர்களிடம் இதுபோன்ற நடந்திருக்கவேக் கூடாது. நடந்த இந்தத் தவறான சம்பவத்திற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
தயவுசெய்து, பவுன்சர்கள் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.