இந்தியாவிற்கு வருகை தரும் சவுதி இளவரசர்.. அடுத்தக்கட்டத்திற்கு போகும் இந்தியா – சவுதி உறவு!

டெல்லி:
சவுதி அரேபியா இளவரசரும், அந்நாட்டு பிரதமருமான முகமது பின் சல்மான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 11-ம் தேதி இந்த சுற்றுப்பயணம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் – ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே நீண்டகால நல்லுறவு நிலவி வருகிறது. குறிப்பாக, சவுதி அரேபியா உடனான இந்தியாவின் உறவு மிகவும் வலுவானதாக மாறியுள்ளது. இந்தியாவின் 4-வது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சவுதி அரேபியா விளங்கி வருகிறது. மேலும், லட்சக்கணக்கான இந்தியர் சவுதி அரேபியாவில் தங்கி பணிபுரிந்து வருவதால் இயற்கையாகவே இரு நாடுகளுக்கு இடையே நல்ல ஒத்துழைப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் வரும் செப்டம்பர் 9-ம் தேதி ஜி 20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பங்கேற்கிறார். இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு பின் இந்தியாவில் முகமது பின் சல்மான் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.

இதன் ஒருபகுதியாக, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் அவர் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, பிரதமர் உடனான பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவையும், வர்த்தகத்தையும் மேம்படுத்தும் வகையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.