டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு மருந்துகள் கையிருப்பு: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட அனைத்து காய்ச்சல்களுக்கு தேவையான மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவது அதிகரித்துள்ளது. இதனால்,டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும், சிகிச்சைக்கான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைக்குமாறும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பருவகால நோய்களுக்கு தேவையான மருந்துகள், மருத்துவப் பொருட்கள் தமிழகத்தில் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள், மழைக்கால காய்ச்சல்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மாத்திரைகள் சில மாதங்களுக்கு முன்பே வாங்கப்பட்டன. அதன்படி, டெங்குவுக்கு வழங்கப்படும் ஓசல்டாமிவிர் மாத்திரைகள் 2 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பில் உள்ளது. காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மாத்திரைகளும் தேவையான அளவு உள்ளன.

இதுதவிர, தொண்டை அடைப்பான், ரண ஜன்னி, கக்குவான் இருமலுக்கான டிபிடி தடுப்பூசிகள், ஓஆர்எஸ் உப்பு சர்க்கரை கரைசல், கிருமி தொற்றுக்கான அசித்ரோமைசின் மாத்திரைகள் ஆகியவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு இருப்பில் உள்ளன. நீரில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கான குளோரின் மருந்தும் போதிய அளவில் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.