வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எனக்கு பிடித்த 3 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – ஜாஸ் பட்லர்

லண்டன்,

கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி-யின் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இயான் மோர்கன் தலைமையில் கைப்பற்றிய இங்கிலாந்து அணியானது இம்முறை ஜாஸ் பட்லரின் தலைமையில் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது.

ஜாஸ் பட்லர் தலைமையிலான இந்த இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் பார்க்கப்பட்டு வரும் இவ்வேளையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த 3 பேட்ஸ்மேன்கள் குறித்து ஜாஸ் பட்லர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஒருநாள் கிரிக்கெட்டில் சில வீரர்கள் தங்களுக்கே உரித்தான மிகச்சிறப்பான திறன்களுடன் களத்தில் அற்புதமாக பேட்டிங் செய்வார்கள். அந்த வகையில் நான் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் டி காக் ஆகிய மூவரையும் பார்த்து ரசித்திருக்கிறேன். அவர்களது ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ரோகித் சர்மாவிடம் எனக்கு பிடித்தது அவருடைய புல் ஷாட் தான். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஸ்கோர்களை எளிதாக அடிக்கும் அவர் புல் ஷாட் அடிப்பதில் சிறந்தவர். அவரது அந்த ஷாட் எனக்கு மிகவும் பிடிக்கும் அவருடைய பேலன்ஸ், டைமிங். பவர் எல்லாம் அந்த ஒரு ஷாட்டில் மிக அருமையாக இருக்கும்.

ரிஷப் பண்ட் எப்பொழுதுமே எந்த ஒரு அணிக்கு எதிராகவும் விளையாடும் போது பயமின்றி களத்தில் எதிரணியின் பவுலர்களுக்கு எதிராக அட்டாக்கிங் செய்து விளையாடுவார். அவரது அந்த மனநிலையுடன் கூடிய அதிரடியான ஆட்டம் தனக்கு பிடிக்கும்.

ஸ்கொயர் லெக் மற்றும் மிட் விக்கெட் திசையில் டி காக் மிகவும் பலம் வாய்ந்த வீரர். அந்த ஏரியாவில் பந்து வந்தால் நிச்சயம் அவரால் பிக்கப் ஷாட் மூலம் சிக்ஸ் அடிக்க முடியும். அதை பலமுறை அவர் செய்தும் காட்டியுள்ளார். அந்த வகையில் அவரது அந்த பேட்டிங் ஸ்டைலும் எனக்கு பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.