உதயநிதி தலைக்கு 10 கோடி.. சாமியாருக்கு ஆதரவாக பேசிய செல்லூர் ராஜு.. "வன்முறை கிடையாதாம்"

மதுரை:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டி வருபவர்களுக்கு உத்தரபிரதேச சாமியார் ஒருவர் ரூ.10 கோடி சன்மானம் அறிவித்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு, மலேரியாவுடன் சனாதனத்தை ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் மட்டுமின்றி இந்து அமைப்புகளும், அஹோரிகளும், சாமியார்களும் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதன் உச்சக்கட்டமாக, உதயநிதியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என உத்தரபிரதேசத்தில் பரமஹன்ச ஆச்சார்யா என்ற ஒரு சாமியார் பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்.

சாமியாரின் இந்த அறிவிப்பு பெரும் பதற்றத்தை உருவாக்கிய நிலையில், அமைச்சர் உதயநிதி அதனை அசால்ட்டாக டீல் செய்தார். “என் தலை மேலே அந்த சாமியாருக்கு என்ன ஆசைனு தெரியல. என் தலைக்கு 10 கோடி ரூபாய் கொடுக்க ரெடியா இருக்காராம். என் தலையை சீவ எதுக்கு 10 கோடி. 10 ரூபா சீப்பு இருந்தா நானே சீவிக்குவேன். தமிழுக்காக தண்டவாளத்தில் தலையை வைத்தவர் கலைஞர். அவரது பேரன் நான். இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்” என உதயநிதி பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில், சாமியாரின் இந்த அறிவிப்பு தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகி செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அதிமுகவை பொறுத்தவரை எல்லா மதத்தையும் மதிக்கக் கூடிய கட்சி. அதிமுகவுக்கு ஜாதி கிடையாது. மதம் கிடையாது. திமுகவை பற்றி நான் பேச விரும்பவில்லை. உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாயை சாமியார் ஒருவர் அறிவித்திருக்கிறார். சாதுக்களே இப்படி மனம் வெதும்பி மனம் புழுங்கி பேச வைத்திருக்கிறார்களே என்றுதான் இதை பார்க்கிறேன். மற்றபடி அந்த சாமியார் சொன்னதை நான் வன்முறையாக பார்க்கவில்லை” என செல்லூர் ராஜு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.