தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில், எப்போது கனமழை? வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரைக்குமான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்டம்பர் 6) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை செப்டம்பர் 7ஆம் தேதி கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

செம்படம்பர் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மூன்று நாள்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

உசிலம்பட்டி கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

செப்டம்பர் 6 இன்று முதல் செப்டம்பர் 12ஆம் தேதி வரை ஏழு நாள்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்றும் நாளையும் (செப்டம்பர் 6,7) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஓசூர், சூளகிரி, சின்னார் அணை ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.