நாட்டிலேயே முதன்முறையாக நிறுவன கால்பந்து லீக் தொடர் தொடங்க பரிந்துரை…!!

புதுடெல்லி,

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் போட்டி குழு இன்று, நாட்டில் பல்வேறு உள்நாட்டுப் போட்டிகள் நடத்துவதற்குரிய வழியைப் பற்றி விவாதிக்க எற்பாடு செய்திருந்தது.

இதில், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் ஷாஜி பிரபாகரன் மற்றும் துணை பொதுச்செயலாளர் சத்யநாராயணன், இதர போட்டி குழு உறுப்பினர்கள், மோகன் லால், சையத் இம்தியாஸ் ஹுசைன், பிக்ரம்ஜித் புர்காயஸ்தா மற்றும் அஸ்லாம் அகமது கான் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாட்டிலேயே முதன்முறையாக நிறுவன கால்பந்து லீக்கை அறிமுகப்படுத்த குழு பரிந்துரைத்துள்ளது. இது ஜனவரி 2024-ல் தொடங்கப்படலாம். இந்த லீக் கால்பந்தை மேம்படுத்துவதற்கும், தனியார் நிறுவனங்களில் வீரர்கள் சேர்ப்பை ஊக்குவிக்கவும் உதவியாக இருக்கும்.

இதில் 16-க்கும் குறைவான அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒற்றைப் பிரிவு போட்டி வடிவம் பின்பற்றப்படும். 16-க்கும் மேற்பட்ட அணிகள் லீக்கில் பங்கேற்கும் பட்சத்தில், பல பிரிவு வடிவம் பின்பற்றப்படும். மேலும், தேர்வு செய்யப்பட்ட அணிகளுடன் கலந்தாலோசித்து லீக் வடிவத்தை முடிவு செய்ய வேண்டும் என்று கமிட்டி பரிந்துரைத்தது. இந்த தொடரில் முதலிடம் மற்றும் 2ஆம் இடம் பிடிக்கும் அணிகள் அடுத்தாண்டு நடைபெறும் பெடரேஷன் கோப்பை கால்பந்து தொடருக்கு நேரடியாக தகுதி பெறும்.

சீனியர் ஆண்கள்/பெண்கள் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுகளை நடத்தும் மாநில சங்கங்கள் போட்டியின் குழு நிலைகளில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.