கனவிலும் நினைக்கவில்லை – அட்லி நெகிழ்ச்சி
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‛ஜவான்' படம் இன்று(செப்., 7) வெளியாகி உள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
இப்படம் பற்றி அட்லி அளித்த பேட்டி : ‛‛உலகளவில் 12 ஆயிரம் தியேட்டர்களில் ஜவான் படம் ரிலீஸாகிறது. கனவிலும் நினைக்கவில்லை. இவ்வளவு பெரிய ஹீரோ என்னை அழைத்து படம் பண்ணுவாரா என்று. இப்போதும் ஒரு கனவு போல் உள்ளது.
பிறமொழிகளில் படம் பண்ணுவது நமக்கு புதிதல்ல. பாக்யராஜ், பிசி ஸ்ரீராம், மணிரத்னம் என நிறைய பேர் சாதித்து உள்ளனர். இடையில் கொஞ்சம் குறைந்தது. இப்போது மீண்டும் அதிகமாகி உள்ளது. விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர். கேரக்டருக்காக இறங்கி நடிக்க கூடியவர். அவரை பார்க்கும்போது புதுவித வில்லனாக எனக்கு தெரிகிறார்.
இதுவரை நான் பண்ணிய படங்களில் இந்த படத்தின் ஆக் ஷன் காட்சிகள் அடுத்த லெவலில் இருக்கும். இதற்காக நிறைய உழைத்துள்ளோம். ஹாலிவுட் மற்றும் நம்மூர் சண்டைக் இயக்குனர்கள் என ஏழெட்டு பேர் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். நிச்சயம் ஹாலிவுட் எபெக்ட் இருக்கும். அடுத்து மூன்று – நான்கு மாதம் ஓய்வு தான். எனது மகனுடன் நேரத்தை செலவிட போகிறேன். அதன்பின் தான் அடுத்தபடம் பற்றி யோசிப்பேன்'' என்றார்.