2022/2023 கல்வி ஆண்டிற்காக செப்டம்பர் 14ஆம் திகதி முதல் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – விண்ணப்பங்கள் இணையத்தளத்தின் ஊடாக கோரப்படும
2022/2023 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இம்மாதம் 14ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக நேற்று (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களுக்காக விண்ணப்பங்களை அனுப்புதவற்காக மூன்று வார காலம் வழங்கப்படவிருப்பதாக தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதில் புதிய பாடநெறிகள் சிலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் இம்முறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெளிவுபடுத்தினார்.
2022 கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக இரண்டு இலட்சத்து 63,933 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன் அதில் இரண்டு இலட்சத்து 32,797 பாடசாலைப் பரீட்சார்த்திகளாவர்.
பரீட்சைக்குத் தோற்றியவர்களில் ஒரு இலட்சத்து 66,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளமை சராசரி 63 வீதமாகும்.
இவ்வருடத்தில் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு 45,000 மாணவர்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தது தகைமை பெற்ற மாணவர்களில் 27 வீதமானவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவதற்குத் தகைமை பெற்றுள்ளார்கள்.
பல்கலைக்கழகங்களுக்கு 12 புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தலைவர், வைத்தியத்துறைக்கு 21/ 22 கல்வியாண்டில் 2035 மாணவர்களே உள்வாங்கப்பட்டனர். இம்முறை 2085 மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
அதற்கிணங்க 615 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக உள்ளீர்க்கப்படவுள்ளனர். அவ்வாறே பொறியியல் துறைக்காகவும் அதிக மாணவர்களை உள்ளெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.