விநாயகர் பெருமை பேசப்போகும் உன்னி முகுந்தன்
சபரிமலை சுவாமி அய்யப்பன் பெருமைகளை சொல்லும் 'மாளிகைப்புரம்' படத்தில் நடித்த உன்னி முகுந்தன், அடுத்து விநாயகர் பெருமைகளை சொல்லும் 'ஜெய் கணேஷ்' என்ற படத்தில் நடிக்கிறார். படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். இந்த படத்தை ரஞ்சித் சங்கர் இயக்குகிறார். இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோயில்களான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க இருக்கிறது.
இந்த படமும் மாளிகப்புரம் படம் போன்று நேரடி புராண படமாக இல்லாமல் சமூகத்தோடு ஒன்றிய பத்தி படமாக உருவாக இருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் சங்கர் கூறும்போது “ஜெய் கணேஷ்' படத்துக்கான கதையை எழுதிவிட்டு கதாநாயகனுக்கான தேடலில் இறங்கினேன். அதற்கு உன்னி முகுந்தன்தான் சரியான நபர் என்பதைக் கண்டறிந்தேன். சொன்னால் ஆச்சயர்யம் அடைவீர்கள். உன்னி முகுந்தனை அடையாளம் காட்டியதே விநாயகர்தான். நாங்கள் கதையை விவாதித்தோம். உன்னி முகுந்தனுக்குக் கதை மிகவும் பிடித்துவிட்டது. நாங்கள் இருவரும் சேர்ந்து படத்தை உருவாக்க உள்ளோம்” என்றார்.