கடார் 2 வெற்றியை தொடர்ந்து அப்னே 2ம் பாகத்திற்கு தயாராகும் சன்னி தியோல்

பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 2001ல் வெளியான படம் கடார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் கடார் 2 என்கிற பெயரில் வெளியானது. முதல் பாகத்தை இயக்கிய அனில் சர்மாவே இந்த படத்தையும் இயக்கியிருந்தார். அதில் கதாநாயகியாக நடித்திருந்த அமிஷா பட்டேல் தான் இந்த படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ஜெயிலர், ஓ மை காட் 2 ஆகிய படங்களுடன் போட்டியிட்டு வெளியானாலும் 500 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் அடுத்ததாக 2007ல் தான் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற அப்னே படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் சன்னி தியோல். இதன் முதல் பாகத்தை கடார் 2 பட இயக்குனர் அனில் சர்மா தான் இயக்கி இருந்தார் என்பதால் தற்போது கடார் 2 வெற்றியால் இந்த இரண்டாம் பாகத்தையும் அவரை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்திற்கு இரண்டாம் பாகம் உருவாவது குறித்து சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ள சன்னி தியோல், “கடார் 2 வெளியாவதற்கு முன்பாக இந்த அப்னே படத்தின் இரண்டாம் பாகத்தில் எனக்கு அம்மாவாக நடிக்க பல நடிகைகளை கேட்டபோது தயங்கினார்கள். ஆனால் தற்போது கடார் 2 படத்தின் வெற்றியால் பலரும் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொண்டு எனக்கு அம்மாவாக நடிக்க முன் வந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.