ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள்: பென் ஸ்டோக்ஸ் சாதனை.!

லண்டன்,

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 181 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

போட்டியில் இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், டேவிட் மலன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

76 பந்துகளில் தனது 4-வது சதத்தை பூர்த்தி செய்த பென்ஸ்டோக்ஸ் தொடர்ந்து ரன்வேட்டையாடினார். இரட்டை செஞ்சுரியை நோக்கி வேகமாக பயணித்தார். 45-வது ஓவரில் பென் லிஸ்டர் வீசிய புல்டாசை வித்தியாசமாக தட்டிவிட்ட போது பென் ஸ்டோக்ஸ் கேட்ச் ஆனார். அவர் 182 ரன்களில் (124 பந்து, 15 பவுண்டரி, 9 சிக்சர்) வெளியேறினார்.

இங்கிலாந்து வீரர்களில் இதுவரை யாரும் இரட்டை சதம் அடித்ததில்லை. அந்த அரிய வாய்ப்பை கோட்டை விட்டாலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர்களில் அதிக ரன் விளாசியவர் என்ற சாதனை அவர் வசம் சென்றது.

இதற்கு முன்பு ஜாசன் ராய் 2018-ம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 180 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த சாதனையை பென் ஸ்டோக்ஸ் தற்போது முறியடித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.