மாஹே,
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது ‘நிபா’ வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது. 2 பேர் ‘நிபா’ வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 4 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. நோய் பரவல் கேரள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோழிக்கோடு மாவட்டத்தில் 7 ஊராட்சிகளில் 43 வார்டுகள் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் பரவுவதால், கேரள மாநிலத்தின் அருகே உள்ள புதுவையின் மாஹே மாவட்டத்தில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டு உள்ளது. பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.